சூழ்நிலை கைதிகள்
கதை – அ.பிரியங்கா
“அப்பா, நாம மட்டும் போகலாம். அம்மா வேண்டாம்” என்றாள் யாழினி.
“அம்மாவையும் கூட்டிட்டுப் போலாம் கண்ணா, அவ வீட்ல தனியா இருப்பா இல்ல” என்றார் சுரேஷ்.
“சரி” என்று பாதி மனதுடன் கூறினாள் யாழினி.
அவளுக்கு இன்னும் கோபம் குறையவில்லை. அவள் தாய் தேவியுடன் பேசுவதாக இல்லை. இரண்டு நாட்கள் ஆகி விட்டன. தேவியும் எவ்வளவோ பேச முயன்று விட்டாள்.
“நான் உன்கிட்ட பேச மாட்டேன். நீயும் பேசாத என்கிட்ட” என முடிவாகக் கூறிவிட்டாள் யாழினி.
ஆம்மா தன்னை அடித்தது யாழினிக்கு நினைவில் வந்து கொண்டே இருந்தது. அவள் தேவியை மன்னிக்கப் போவதாக இல்லை.
இரு நாட்களுக்கு முன் தான் அச்சம்பவம் நடந்தது. யாழினி எப்போதும் போலக் காலையில் பள்ளிக்குச் சென்றாள். சுரேஷீம் வேலைக்குச் சென்று மாலை தான் வீடு திரும்புவதால் வீட்டில் தேவி மட்டுமே இருந்தாள்.
அவ்வளவாக நெருங்கிய சொந்தங்கள் இல்லாததாலும், சிலருக்கு மட்டுமே தெரிந்ததாலும், அன்று மதியம் வீட்டில் அடித்த தொலைபேசி தேவிக்கு ஆச்சரியம் ஊட்டியது.
“யாராக இருக்கும், அதுவும் இந்த நேரத்தில்” என்று யோசித்துக் கொண்டே தொலைபேசியை எடுத்தாள் தேவி.
“ஹலோ, யாழினி வீடா. நான் யாழியின் பள்ளி ஆசிரியர் பேசுகிறேன்” என எதிர்முனையில் குரல் கேட்டது.
தேவி பயந்து போனாள், “யாழினியின் பள்ளியில் இருந்தா. ஐயோ யாழினிக்கு ஏதாவதாக இருக்குமோ. காலையில் வேறு ஒழுங்காகச் சாப்பிடவில்லை. நேரமாகி விட்டது என இரண்டு இட்லிகளுக்கு மேல் எதுவும் உண்ணாமலே சென்றாளே. என்னவாக இருக்குமோ” என மனதில் எழுந்த கேள்விகளைப் பொறுத்துக் கொண்டு, “ஆமாங்க மேடம், யாழினியின் தாய் தான் பேசறேன். சொல்லுங்க” எனக் கேட்டாள்.
“அவள் தந்தைக்குத் தான் கால் பண்ணேன் அவர் எடுக்கவில்லை. அதான் தங்களுக்கு அழைத்தேன். நீங்க பிசியா இல்லனா கொஞ்சம் அவள் பள்ளிவரை வர முடிம்” எனக் கூறினார் அந்த மேடம்.
“பள்ளி வரையா? யாழினிக்கு ஏதாவது ஆகி விட்டதோ, மேடம்” எனத் தயங்கிக் கொண்டே கேட்டாள் தேவி.
“சேச்சே. அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. உங்க பொண்ணு யாழினி பத்தி கொஞ்சம் பேசணும். பள்ளி வந்த பிறகு விவரங்களைச் சொல்றேன்” என்றார் அவர்.
சரி எனக் கூறிவிட்டு பள்ளிக்குப் புறப்படத் தொடங்கினாள் தேவி. மனதில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். ஒரு வழியாகப் பள்ளியை அடைந்தபின், தலைமை ஆசிரியர் அறையை நோக்கி நடந்தாள்.
அங்கு அறையின் முன் யாழினியும் இன்னொரு மாணவியும் நின்று கொண்டிருந்தனர். யாழினியை பார்த்த பின்புதான் தேவிக்கு உயிரே திரும்பி வந்தது.
“உனக்கு ஒன்றும் ஆகவில்லையே. நன்றாகத்தானே இருக்கிறாய்” என மகளிடம் சென்று கேட்டாள் தேவி.
அதற்குள் பள்ளி தலைமை ஆசிரியை அங்கு வந்து விட்டார். “வாருங்கள்” எனத் தேவியை அறைக்குள் அழைத்துச் சென்றார்.
“என்ன விஷயமாக என்னை அழைத்தீர்கள் மேடம்” எனக் கேட்டாள் தேவி.
“உங்கள் மகள் செய்த காரியத்தைக் கூறத்தான் அழைத்தேன். தங்களை யாழினி நல்ல மாணவி தான். ஆனால் அதற்காக அவள் மீது எழும் குற்றச்சாட்டுகள் பொய் என ஆகிவிடாது” என்றார் தலைமை ஆசிரியை.
“குற்றமா? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை” என்றாள் தேவி குழப்பமாக.
“உங்கள் மகள் அருகில் நிற்கிறாளே, அப்பெண் மதுமிதா. அவள் உங்கள் மகள் யாழினி மேல் குற்றம் சுமத்துகிறாள். யாழினி அவளுடைய பணம் ஐநுஹ்று ரூபாயை திருடி விட்டாளாம்.” என்றார் ஆசிரியை.
தான் கேட்பதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தாள் தேவி.
ஆசிரியை மீண்டும் தொடங்கினார். “பணம் வைத்த இடம் யாழினியையும் மதுமிதாவையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையாம். அதனால் தான் தங்கள் மகளைத் தவிர வேறு யாரும் அதை எடுத்திருக்க முடியாது என நினைக்க வேண்டியதாயிற்று. பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தைகளைத் தண்டிப்பது எங்கள் நிர்வாகத்தின் முறை அல்ல.
அதனால்தான் தங்களை அழைத்தோம். திருடுவது மிகப்பெரிய குற்றம் ஆகும். தங்கள் மகள் யாழினியை தயவு செய்து கண்டியுங்கள். இதுபோலக் குற்றங்கள் எதுவும் இனி வரும் நாட்களில் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என முடித்தார் தலைமை ஆசிரியை.
தேவி திகைத்துப்போய் அமர்ந்து இருந்தாள்.
“யாழினியா திருடினாளா” என்பது மட்டுமே அவள் காதுகளில் கேட்டது.
அமர்ந்த நாற்காலியில் இருந்து எழுந்தாள் தேவி. நேராக யாழினியின் முன் சென்றாள்.
“அம்மா நான் எதுவும் பண்ணல மா, நான். . . . . . .” எனப் பேச தொடங்கினாள் யாழினி.
“பளார்” என அவள் கன்னத்தில் அறைந்தாள் தேவி.
கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டிய யாழினியை திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தாள் தேவி.
அன்று வீடு திரும்பிய மதியம் முழுவதும் ஏதோ பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்த சோபாவை விட்டு எழாமல் அமர்ந்திருந்தாள்.
“என்ன இங்கு உட்கார்ந்திருக்க” என வீட்டிற்கு வந்த சுரேஷ் கேட்ட கேள்விக்குக் கூட அவள் பதில் அளிக்கவில்லை.
என்ன நடந்தது என விசாரித்த சுரேஷிடம் நடந்த அனைத்தையும் கூறி அழத் தொடங்கினாள் தேவி.
“என் மகள் இவ்வாறு செய்வாள் என நான் கனவிலும் நினைத்தது இல்லை. நான் இதற்காகவா நான் வாழ்ந்த ஊரை விட்டு இவ்வளவு தொலைவில் வந்தேன். மீண்டும் ஒரு குடும்பத்தாரின் திருட்டுப் பட்டத்தைத் தலையில் சுமக்க எனக்கு மனதில் வலு இல்லை, யாழினியை நான் அவ்வாறு வளர்க்கவும் இல்லை” எனப் புலம்பித் தீர்த்தாள்.
“யாழினி அப்படியெல்லாம் செய்யும் பெண் அல்ல தேவி. நீ மனதை வருத்தி கொள்ளாதே. நான் அவளிடம் பேசுகிறேன். நீ அமைதியாக இரு” என்றான் சுரேஷ்.
அவ்வாறே யாழினி வீடு வந்ததும் அவளை அழைத்துப் பேசினான்.
“நான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை அப்பா. மதுமிதா வீணா என்மேல பழி போடறா. நீங்களாவது நம்புங்க” என்றாள் யாழினி. நு
“நான் உன்னை நம்பறேன் யாழினி, உங்க பள்ளிக்கு . . . .” எனப் பேசிக் கொண்டிருந்த சுரேஷை தடுத்து, ”போன வாரம் எங்கிட்ட காசு ஒரு நாறு ரூபாய் கேட்டப்போ நான் மறுத்து விட்டேன். ஆதே மாதிரி அந்த உண்டியலை உடைக்கலாம்னு நீ கேட்டப்போவும் வேண்டாம்னு சொன்னேன். அதனால தான் இப்படித் திருடிட்டு வந்து நிக்குறியா. அப்படிப் பதினைந்து வயசு பொண்ணுக்கு எதுக்குடி காசு. ஏன்டி இப்படி நீயும் என்னைக் கஷ்டப்படுத்துற எனக் கத்தினாள் தேவி.
யாழினி கண்களில் நீர் தேங்கியபடி தன் அறைக்கு ஓடினாள்.
“அவமேல ஏன் இப்படிக் கோவத்த காட்ற” எனச் சொல்லிக்கொண்டே யாழினியை சமாதானப்படுத்தச் சென்றான் சுரேஷ்.
அன்று இரவு யாழினியும் சரி தேவியும் சரி ஒழுங்காகத் தூங்கவே இல்லை.
மறுநாள் யாழினியுடன் பள்ளிக்குச் சென்றான் சுரேஷ்.
மதியம் வீட்டிற்குத் திரும்பியவன் நேராகத் தேவியிடம் சென்றான்.
“நான் தான் அவ ஒன்னும் தப்புப் பண்ணியிருக்க மாட்டான்னு சொன்னேன்ல. அவளோட வகுப்புலயே இன்னொரு பொண்ணு இவங்க அந்தப் பணத்தைப் பற்றிப் பேசியதை ஒட்டுக் கேட்டுருச்சாம். அந்த வகுப்புல இருக்க எல்லாத்தயும் விசாரிச்ச அப்போ தெரிய வந்துச்சு. மதுமிதா-ங்ற பொண்ணும் நம்ம யாழினியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டா. அந்தப் பள்ளி தலைமை ஆசிரியையும் இப்படி விசாரிக்காம நம்ம யாழினியை சந்தேகப் பட்டதுக்கு வருந்துனாங்க. நீதான் தோ அவள நம்பாம இப்படிக் கை ஓங்கிட்ட. யாழினி அப்படிலாம் பண்ண மாட்டா” எனச் சுதேஷ் பேசப்பேச தேவியின் கண்களில் கண்ணீர் சிந்தியது.
மாலை யாழினியின் வருகைக்கு மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தாள்.
யாழினியின் பள்ளிப்பேருந்து வந்த சத்தம் கேட்ட உடன் வாசலுக்கு ஓடினாள். யாழினியோ தன் அம்மாவை பார்க்காதவாறு வீட்டிற்குள் நுழைந்தாள். தாய் எவ்வளவு பேச முயன்றும் அவள் பேசவில்லை.
இன்றும் சினிமாவிற்குப் போகலாம் என முடிவு எடுத்த பொழுது தேவியுடன் வர அவள் தயங்கினாள். ஒரு வழியாக மூவரும் சினிமா பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது ஒரு மதிக்கத்தக்க வயதுடைய ஒருவர் தேவியை அணுகினார்.
“தேவி, நீயா இது” என ஆச்சரியத்துடன் கேட்டார்.
தேவியின் முகத்திலும் அதே ஆச்சரியம். “சிவா, நீயா. எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன” என இருவரும் மகிழ்ச்சியோடு தழுவினார்.
“என்னங்க ஞாபகம் இருக்கிறதா, என் தம்பி சிவா” எனச் சுரேஷிடம் அறிமுகப்படுத்தினாள்.
சுரேஷும் சிவாவைப் பார்த்து புன்கையுடன் தலை அசைத்தான். நால்வரும் வீட்டை சென்று அடைந்தனர்.
சிவாவும் தேவியும் பார்த்துக் கொள்ளாத வருடங்களின் கதைகளைப் பரிமாறிக் கொண்டனர். தேவி பெருமிதத்துடன் யாழினியை அழைத்து, “என் மகள் யாழினி” எனக் கூறினாள்.
“இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாளே. யாழினி, நான் உனக்கு மாமா. உனக்கு என்னை யார் என்று தெரிய வாய்ப்பில்லை. நீ அப்படியே எங்கள் அம்மாவை போல இருக்கிறாய். குடும்பங்கள் இவ்வாறு உடைந்து போகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்” எனக் கூறினான்.
தேவியும் சிவாவும் அமைதியாகிப் போனார்கள். சுரேஷ் யாழினியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“யாருப்பா அந்த அங்கிள், எனக்கு மாமானு சொல்றாரு” எனச் சுரேஷிடம் கேட்டாள் யாழினி.
சற்று அமைதிக்குப் பிறகு சுரேஷ் பேசத் தொடங்கினான்.
“அது ஒரு பெரிய கதை, யாழினி. உனக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய வயசும் வந்திருச்சு. இது நீ பொறக்கறதுக்கு முன்னாடியே நடந்தது. உங்க அம்மா கிராமத்துல தான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே. அவ்வளவு வசதியெல்லாம் ஒண்ணும் இல்ல. ஏழைங்கதான். ஒரு காலத்துல உங்க பாட்டி தாத்தா எல்லாம் ஓகோன்னு வாழ்ந்தவங்க தான். ஏதோ நஷ்டமாகி ஏழை ஆய்ட்டாங்க. உங்க தாத்தா ஏதோ பணக்கார வீட்டுல வேலை பார்த்துட்டு இருந்தார். உங்க அம்மாக்கு கல்யாண வயசு வந்துச்சு. உங்க மாமா, உள்ள உட்கார்ந்திருக்காரே அவர் அப்போ படிச்சிட்டு இருந்தார். அப்போ, உங்க தாத்தா செலவு அதிகமாய்டதுனாலயோ என்னவோ இல்ல கடன் கட்ட முடியாததாலோ, அவள் வேலை பார்த்த பணக்கார வீட்டில இருந்து நிறையப் பணத்தைத் திருடிட்டாரு. திருடின பிறகு ஊர்ல மாட்டிக்கிட்டாரு. ஆவர ஜெயில்ல (துயடை) போட்டுட்டாங்க. கிராமத்துல இருந்து உங்க பாட்டி, அம்மா, மாமா மூணு பேரையும் ஒதுக்கி வெச்சிட்டாங்க. ஜெயில்லயே ஒரு ஆறு மாசம் இருந்த உங்க தாத்தா தற்கொலை பண்ணிக்கிட்டாரு. குடும்பப் பேர் கெட்டு போனதால உங்க அம்மாவுக்கும் வரம் அமையல்ல. ழுடிப்பு பாதியிலேயே நின்னதால உங்க மாமா வாழ்க்கையும் வீணாயிடிச்சு. இப்படிக் குழந்தைங்க இரண்டு பேரும் கஷ்டப்படுறத பார்க்க மனசில்லாம உங்க பாட்டியும் இறந்துட்டாங்க.
உள்ளூருல வேலை கிடைக்கலனு, வெளியூர் போய் வேலை தேட போயிட்டாரு உங்க மாமா. உங்க அம்மாவும் இந்த ஊருக்கு வேலை தேடி வந்துட்டாங்க. அப்படி இருக்கப்போதான் நாங்க சந்திச்சிக்கிட்டோம். அப்போல்லாம் போன் வசதி இல்லாததால உங்க அம்மாவால அவங்க தம்பி கூடத் தொடப்புல இருக்க முடியல.
நானே அவரைப் போட்டோவுல தான் பார்த்திருக்கேன். அவங்க குடும்பமே சிதைந்து போனது அந்தத் திருட்டால தான்-னு உங்க அம்மா அடிக்கடி சொல்லுவா, அதனால தான் நீ திருடின எனக் கேள்விபட்ட போது உங்க அம்மா இப்படி அவ நிதானத்தை இழந்துட்டா. நீயும் எங்க அந்தக் குற்றத்தை பண்ணிடுவயோ-னு அவ பயந்துட்டா. மத்தபடி அவ உன் அளவுக்கு வேற யாரையும் நேசிச்சதேயில்லை” எனக் கூறி முடித்தான் சுரேஷ்.
இதை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் யாழினி.
மறுநாள் விடிந்த பிறகு, சிவா புறப்படத் தொடங்கினான். மறுபடியும் நிச்சயமாக வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டுச் சென்றான். அன்று மாலை வீடு திரும்பிய யாழினி அறையிலேயே ஏதோ செய்து கொண்டிருந்தாள். தேவியையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை.
இரவு சமைத்து முடித்துவிட்டு வந்த தேவியின் கண்களில் சோபாவில் இருந்த ஒரு கவர் பட்டது. அதன் அருகே ஒரு கடிதம் இருந்தது. யாழினியின் அழகிய கையெழுத்தில் எழுதி இருந்தது.
“அம்மா, சாரி. அப்பா தங்களைப் பற்றிக் கூறினார். நடந்ததில் தவறு எதுவும் தங்கள் மேல் அல்ல. அதேபோல் அன்று பள்ளியில் நடந்ததிலும் நீங்கள் என்னை அடித்ததிலும் தவறு இல்லை. நான் அப்பணத்தை எடுக்கவில்லை. நீங்கள் என்னைச் சந்தேகப்பட்டதால் கோபித்துக் கொண்டேன். நாம் அனைவரும் இதில் சூழ்நிலை கைதிகளாகி விட்டோம். அன்று தங்களிடம் பணம் கேட்டதற்கும், உண்டியலை உடைக்கச் சொன்னதற்கும் காரணம் அக்கவரில் உள்ளது.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”
அக்கவரை திறந்த தேவிக்கு ஆச்சரியம். உள்ளே ஒரு பட்டு புடவை இருந்தது. தேவி அதைக் கண்டதும் மகிழ்ச்சியில் சிலை போல் அமர்ந்துவிட்டாள். சுரேஷ் உள்ளே நுழைந்தான்.
“நானும் யாழினியும் தான் வாங்கினோம். அவள் தான் உனக்கு இதைச் செலக்ட் செய்தார்” எனக் கூறினான்.
யாழினியின் அறை கதவைத் திறந்தாள். யாழினி மேஜை மேல் அமர்ந்திருந்தாள். யாழினியை கட்டித் தழுவி கொஞ்சினாள் தேவி.
“தன் மகள் தன் தவறை புரிந்து கொண்டதற்கும், தன்னை மன்னித்ததையும் நினைத்துப் பெருமிதம் கொண்டாள். இருவரும் இருவரையும் முழுதாகப் புரிந்து கொண்டனர். என்னவாக இருந்தாலும் தாயும் சேயும் இரு உடல் ஒரு உயிர் அல்லவா, எவ்வாறு புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்.